சோழர்கால குந்தவை ஜீனாலயம் – A.T மோகன், சேலம்

திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் ஏற்பாடு செய்து இருந்த திருமலை, குந்தவை ஜினாயலயம் மரபு நடைக்கு சென்று இருந்தேன். மிக மிக அருமையான ஏற்பாடு, காலை தேநீர் முதல் சிற்றுண்டி, மதிய உணவு என அனைத்தையும் நிர்வாகிகள் பிரகாஷ், பாலமுருகன், பிரேம்குமார் முதலானோர் ஏற்பாடு செய்து இருந்தனர்.இதில் அறிஞர் பெருமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என நூற்றீருபதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ், கையேடு, திருவண்ணாமலை வரலாற்று வரைபடம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் புத்தகம் என அனைவரையும் அசத்திவிட்டனர்.
இனி திருமலை குந்தவை ஜியாலத்தை பற்றிய சிறிய குறிப்பினைக் காண்போம். குந்தவை ஜினாலயம் என்பது இராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை நாச்சியார் இராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் கட்டியதாக அறிகின்றோம். இது கி.பி.11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

கருவறைக்கு அடுத்தார் போலக் காணும் தூண்கள் மட்டுமே சோழர்காலத் தூண்கள். ஏனைய தூண்கள் ஏனைய கட்டுமானப் பணிகளின் போது புணரமைக்கப்பட்டன. இக்கோயிலில் குன்றினில் அமர்ந்த குருவாய் இருப்பவர் நேமிநாதர். கருவறைக்கு வெளியே வந்தால் அங்கும் ஒரு மூலவர் சிலை இருப்பதைக் காணலாம். இதுவே இவ்வாலயத்தைக் குந்தவை கட்டியபோது வைக்கப்பட்டிருந்த நேமிநாதர் சிற்பமாகும். இதன் வேலைப்பாடு கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. வேறு எங்கும் காணாத வகையில் இச்சிலையில் மூங்கிற் கீற்றுகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதே கோவிலில் பிரம்மதேவருக்கும் ஜ்வாலாமாலினிக்கும் கற்சிலைகள் உள்ளன.

கோயிலுக்கு வடக்கில் பாறையில் கலைச்செழுமை வாய்க்கப்பெற்ற ஒரு பகுதி உள்ளது. புதையல் போன்று காட்சியளிக்கும் இப்பகுதி பொக்கிஷம் போல பாதுகாக்கப்பட வேண்டியது என்பதில் அய்யமில்லை. குறுகலான படிகளில் ஏறிச்சென்றால் உள்ளே குகைக்குள் தருமதேவி, நேமிநாதர், பாகுபலி ஆகியோரது சிற்பங்கள் இருப்பதைக் காண முடியும்.
தருமதேவியின் சிற்பம் நான்கரை அடி உயரம் கொண்டது. தனது இடது காலை சிம்மத்தின் மீது வைத்த வண்ணம் காட்சி தருகின்றார்.
பாகுபலியின் சிற்பத்தின் அருகில் இருக்கும் காட்சி அற்புதமானது. அவரது உடலை மாதவிக் கொடிகள் (காட்டு மல்லிகை) படர்ந்திருப்பதையும் அதனை அவரது ஒரு சகோதரி தூய்மை செய்வதையும் காட்டும் வகையில் இச்சிற்பத்தைத் செதுக்கி உள்ளனர்.

இதனை அடுத்து வெளியேறி மறு பக்கத்துக் குகைக்குச் சென்றால் அங்கே பல அறைகள் கொண்ட குகைப்பள்ளி இருப்பதைக் காணலாம். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக விரிவாக கல்லினால் செய்யப்பட்ட அறைகள் பாறைக்குள் குடைந்து செதுக்கப்பட்டிருப்பது விந்தையிலும் விந்தை.

இந்த குகைப்பள்ளிக்குள் சுவர்களில் ஆங்காங்கே சமணச் சின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல சிதிலமடைந்து போயுள்ளன.

இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கனவாக இருப்பவை:

1) ஜ்வாலாமாலினி வடிவம்
2) சமவசரண வட்டம்
3) லோக ஸ்வரூபம்
4) ஜம்புத் தீவு ஓவியம்
படை பட்டையான சிவப்பு மேற்கூரை ஓவியங்கள்.
சிவப்பு நிறத்தினால் கீறப்பட்ட அனைத்து ஓவியங்களும் சோழர் காலத்தவையே.
குகைப்பள்ளிக்கு வெளியே சில கல்வெட்டுக்களும் இங்குள்ளன. ஊருக்கு நடுவில் இராஜராஜன் சிலையும் கல்வெட்டும் காணப்படுகிறது.

அதை அடுத்த ஸ்ரீ பஞ்சகுல தேவியர் ஆலயம் ஸ்ரீ க் ஷேத்ர அரிஹந்தகிரி ஜெயின் மடத்தில்

1.பார்சுவநாதர் – யக் ஷன் தரணேந்திரன்
யக் ஷி ஸ்ரீ பத்மாவதி தேவி
2. ஆதிநாதர் – யக் ஷன் கோமுகன் யக் ஷி ஸ்ரீ சக்ரேஷ்வரி தேவி
3.நேமிநாதர் – யக் ஷன் சர்வாணயக் ஷன் யக் ஷி ஸ்ரீ கூஷ்மாண்டினி தேவி (அ) தர்மதேவி
4. ஸ்ரீ வாராஹி தேவி
5. ஸ்ரீ ஜ்வாலாமாலினி தேவி. சிலைகளும் காணப்படுகின்றன.

வரலாற்று ஆர்வலர்கள் பலரும் கலந்துக் கொண்ட இம்மரபு நடையானது வரலாற்றுக்கு புத்துணர்வு அளிப்பதாகவும், நம் வரலாற்றில் உள்ள விஷயங்களையும், அதன் சிறப்புகளைப் பற்றி அறிந்துக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, இம்மரபு நடையை திறம்பட நடத்தி முடித்த திருவண்ணாமலை ஆய்வு நடுவத்திற்க்கும் அதன்தலைவர் திரு. பாலமுருகன் அய்யா அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

One comment

  1. குந்தவை ஜினாலயம் பற்றிய செய்திகள், குகை பற்றிய செய்திகள், இன்னும் பிற செய்திகளும் அருமை.
    நன்றாக உள்ளது.

Leave a Reply