ஔவையாருக்கும் கோவில் உண்டு – க.கோமகள் அனுபமா, கட்டிடகலை நிபுணர்/உதவி பேராசிரியர்

இந்த உலகின் மிகப்பெரிய வரம் – திருமணம்தான்! வாழ்நாளின் மிகப்பெரிய கடமையாக, லட்சியமாக, விருப்பமாக பெற்றோர்கள் கொண்டிருப்பதும் மகன் அல்லது மகளின் திருமணத்தையே! ஆனால், அந்த இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க அப்பாவும் இல்லை; அம்மாவும் கிடையாது. அதுமட்டுமா? அந்தத் தேசத்தை ஆட்சி செய்த மன்னனின் மாணிக்கங்களான இவர்கள், இப்போது குடிசை வீட்டில் அல்லவா இருக்கிறார்கள்.

 

சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பகைத்துக் கொண்ட இந்த மன்னனை, மூவேந்தர்களும் கைகோத்து போரில் எதிர்த்தனர்; ஜெயித்தனர். தேசத்தையும், தந்தையையும், உறவுகளையும், சொத்துகளையும் இழந்து, குடிசையில் வாழும் இந்த இரண்டு பெண்களுக்கும் திருமண வயது வந்து விட்டாலும், வரன் பார்க்கத்தான் எவரும் வரவில்லை.

இந்த நிலையில், அந்தக் கிழவி யாத்திரையாக வந்தாள். தள்ளாமையும் நடந்து வந்த களைப்பும் சேர்ந்து அவளை இளைப்பாறத் தூண்டின. அந்தப் பெண்களின் குடிசைக்கு வந்தாள்; ‘தாகமாக இருக்கிறது’ என்றாள். இளம்பெண்கள் இருவரும் கேப்பைக் களியையும் கீரையையும் கிழவிக்குச் சாப்பிடக் கொடுத்தனர்; உடுத்திக்கொள்ள புத்தாடையையும் தந்தனர். அந்தக் குமரிகளின் முக லட்சணத்தையும் வள்ளல் தன்மையையும் கண்டு ஆச்சரியப்பட்ட கிழவி, அவர்களது பூர்விகத்தை விசாரித்தாள். அவர்கள் மெல்ல, தயங்கி தயங்கிச் சொல்ல… அதிர்ந்தாள் கிழவி.

பின்னே பாரி மன்னனின் மகள்களான அங்கவையும் சங்கவையும் அல்லவா, அவர்கள்! ‘உங்களின் திருமணத்தை நானே நடத்தி வைக்கிறேன்’ என்று உறுதி கொடுத்தாள் கிழவி. இவளும் சாதாரணமானவளா என்ன?

முத்தமிழையும் இறைச் சிந்தனையையும் உயிராகக் கொண்ட ஔவையார் ஆயிற்றே!

ஊரூராக மாப்பிள்ளைத் தேடினார். ஆனால், மூவேந்தர்களுக்கு பயந்து, இந்தப் பெண்களை மணக்க எவருமே முன்வரவில்லை. மலைத் தேசத்தை ஆட்சிசெய்த மலையரசன் தெய்வீகனுக்கும் உள்ளுக்குள் பயம்; ஆனாலும் திருமணத்துக்கு சம்மதித்தான்.

இதை அறிந்த ஔவையார், நேரே விநாயகர் சந்நிதிக்குச் சென்றார். மனம் உருகி வேண்டினார். அந்த நிமிடமே விநாயகப்பெருமான் எழுந்தருளினார். ஓர் ஓலையில் தன் கைப்பட திருமணத் தகவலை எழுதி, ஔவையிடம் கொடுத்தார்.

அந்தத் திருமண ஓலையை மூவேந்தர்களிடமும் காட்டினார் ஔவை. நெகிழ்ந்து வியந்தவர்கள், ‘’நாங்களே நேரில் வந்து ஆசீர்வதிக்கிறோம்’’ என்றனர்.

அதன்படி திருமணத்தில் கலந்து கொள்ள வந்த பாண்டிய அரசன் தங்கியிருந்த இடம் வீரபாண்டி எனப்பட்டது; சேரன் தங்கிய இடம் சேரபுரி எனப்பட்டது (இதுவே பின்னாளில், ‘சேலம்’ என்று மருவியதாம்!); சோழன் தங்கிய இடத்தை உத்தமசோழபுரம் என்றனர்.

இந்த உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகரபுரநாதர் ஆலயத்தில்தான் அங்கவை, சங்கவை இரண்டு பேருக்கும் திருமணம் விமரிசையாக நடந்தேறியது.

சேலம் நகருக்கு அருகில் உள்ள அற்புதத் தலம் உத்தமசோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் திருக்கோயில். திருமண ஓலை எழுதிக் கொடுத்த விநாயகர் அருள்பாலிப்பதும் இந்தக் கோயிலில்தான் ! சரி… அதென்ன கரபுரநாதர் ?!

ராமாவதார காலம்… யுத்தத்தில் ராவணன் அழிந்தான். இதையடுத்து, அவனது சகோதர உறவுகளான கரன், தூஷணன் ஆகியோர், இலங்கையின் ஆட்சிப் பொறுப்பு தங்கள் வசம் வர வேண்டும் என்று, மணிமுத்தாறு நதியின் (திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது போல், இங்கும் ஒரு மணிமுத்தாறு உண்டு. இந்த நதியை திருமணிமுத்தாறு என்றும் கூறுவர்).

மேற்குப் பகுதியில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தனராம். ‘இவர்களது கையில் இலங்கையின் அரசு அகப்பட்டுவிடக் கூடாது’ என்று வரமே தராமல் சிவபெருமான் இழுத்தடிக்க, அசுரர்கள், அக்னிப்பிரவேசம் செய்ய முடிவெடுத்தனர்.

இதனால், ‘சிறிது காலம் மட்டுமே ஆட்சி செய்வீர்கள்’ என்று வரம் தந்தார் சிவனார். கரனுக்கு அருளியதால் இங்கு உள்ள இறைவனுக்கு, ‘ஸ்ரீகரபுரநாதர்’ என்று திருநாமம். அதுமட்டுமா ?

இந்த ஆலயத்தில் பூஜைகள் செய்து வந்த அர்ச்சகர் ஒருவருக்கு குணசீலன் என்றொரு மகன்; எட்டு வயது. தினமும் தந்தை செய்யும் சிவபூஜையை வியப்பும் ஆர்வமும் பொங்க கவனித்து வந்தான் குணசீலன்.

ஒருநாள் தந்தை வெளியூர் சென்றிருக்க, சிவபூஜை செய்ய ஆலயத்துக்கு வந்தான் குணசீலன். அருகில் உள்ள மணிமுத்தாறு நதியில் இருந்து குடத்தில் தண்ணீர் நிரப்பி, தூக்க முடியாமல் தூக்கி வந்து, சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய முனைந்தான். பாவம், லிங்கத்தின் சிரசுப்பகுதி, அவனுக்கு எட்டவில்லை; அபிஷேகம் செய்ய முடியாமல் தவித்தான். அப்போது திடீரென லிங்கத்தின் சிரசுப் பகுதி, குணசீலனுக்காக சற்றே சாய்ந்து கொடுக்க, உற்சாகத்துடன் துள்ளி குதித்தவன், ஆசை ஆசையாக ஈசனை நீராட்டி, பூச்சூடி பூஜைகள் செய்தானாம்.

இன்றைக்கும் சற்றே சாய்ந்தபடிக் காட்சித் தருகிறது ஸ்ரீகரபுரநாதரின் லிங்கத் திருமேனி. சிறுவனின் கரத்துக்குத் தக்கபடி அவன் பக்கமாக சாய்ந்து கொடுத்ததால், ஸ்ரீகரபுரநாதர் என்றுப் பெயர் அமைந்ததாகவும் சொல்வர். முடிசாய்ந்த ஈசன் என்றும் ஒரு பெயர் உண்டு.

ஆக, திருமண வரம் மட்டுமின்றி, நினைத்தவற்றையும் இழந்தவற்றையும் கூட அருளுவதில் அலாதி விருப்பம் ஸ்ரீகரபுரநாதருக்கு! அம்பாளின் திருநாமம் – ஸ்ரீபெரியநாயகி. இவளும் கருணைத் தெய்வம்தான். திருமூலர், உருகி உருகிப்பாடிய தலங்களில் இதுவும் ஒன்று.

இங்கேயுள்ள வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியரை உள்ளம் குளிரப் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.

இந்த ஆலயத்துக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தும் பஞ்ச இந்திரியங்கள் எனப்படும். இவற்றில்

கண்ணாக விளங்கும் தலம் – சேலம் ஸ்ரீசுகவனேஸ்வரர் ஆலயம்
மூக்கு- பில்லூர் ஸ்ரீவீரட்டேஸ்வரர் கோயில்
வாய் – மாவுரெட்டி ஸ்ரீபீமேஸ்வரர்
உடல் – நஞ்சை இடையாறு திருவேலீஸ்வரர்
காது – உத்தமசோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் ஆலயம் என்பர்.

ஆக, காதில் ஏதேனும் பிரச்னை என்றால், அதனைத் தீர்த்து வைக்கும் திருத்தலம் இது என்கிறார்கள்.

அற்புதமான ஆலயம். நுழைவாயிலிலேயே, நின்ற கோலத்தில் அருள்கிறார் ஔவையார். கல்யாண ஔவையார் என்கின்றனர் பக்தர்கள்.

மனதில் எந்தக் குறை இருந்தாலும் இங்கே வந்து தரிசித்தால் போதும்… துன்பம் தீர்த்து, கைகொடுத்து நம்மை உயர்த்தி விடுவார் ஸ்ரீகரபுரநாதர் தோஷங்கள் விலகியோடும் !

ஸ்ரீவிநாயகர் திருமண நிச்சயதார்த்த ஓலை எழுதிக் கொடுத்த திருத்தலம் என்பதால், இங்கே வந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீகரபுரநாதர், ஸ்ரீபெரியநாயகி, ஔவைப்பிராட்டி ஆகியோரை வழிபட்டால், களத்திர மற்றும் செவ்வாய் முதலான அனைத்து தோஷங்களும் விலகும்; புத்திர பாக்கியம் கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.

ஆலயத்தில், ஸ்ரீகாலபைரவருக்கு சந்நிதி உள்ளது. இதில் விசேஷம். சந்நிதியின் முகப்பில் அஷ்ட பைரவர்களின் சுதைச் சிற்பமும் உள்ளது. தேய்பிறை அஷ்டமி நாளில், ஸ்ரீகால பைரவரை வணங்கி வழிபட. சத்ரு பயம் மற்றும் தீவினைகள் நீங்கும்; ஆயுள்விருத்தி பெருகும்; அனைத்து நலனும் உண்டாகும் என்பது நம்பிக்கை!

கயிலாயத்துக்கு இணையான தலம்!

ஸ்ரீகரபுரநாதரின் கருவறைச் சந்நிதி நுழைவாயிலின் இருபுறமும் சுதைச் சிற்பமாக திகழும் நந்திகளைக் காணலாம். திருக்கயிலாயம் போன்றே இந்தக் கோயிலிலும் நுழைவாயிலில் நந்திதேவர் காவல் அனுக்கிரகம் செய்வதால், கயிலாயத்துக்கு நிகரான தலம் இது என்கின்றனர் பக்தர்கள்.

பக்தர்கள் முதுகில் அடி!

மதுரையம்பதியில் ஈசன் பிட்டுக்கு மண் சுமந்த கதை தெரியும்தானே இங்கே. ஆலயத்தில் வந்திக் கிழவியின் விக்கிரகமும் உள்ளது. எனவே வருடந்தோறும் ஆவணி மூல நட்சத்திர நாளில், பிட்டுத் திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.

இந்த நாளில், அர்ச்சகர் கையில் சிறிய கோல் ஒன்றை வைத்திருக்க, பக்தர்களின் முதுகில் கோலால் அடிக்கும் (மெதுவாகத்தான்!) நிகழ்ச்சி நடைபெறும். அப்படி முதுகில் அடி வாங்கினால், சிவனாரின் பூரண அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

இங்கே நீண்டகால தவம் இருந்து, சிவனருள் பெற்ற கரடிச் சித்தருக்கும் சந்நிதி அமைந்துள்ளது சிறப்பு. வியாழன் தோறும் கரடிச் சித்தரை வணங்கி வழிபட, கல்வி – கேள்வியில் சிறக்கலாம்; ஞானம் கிட்டும் என்கின்றனர்

சேலம் மாவட்டத்தில் உள்ளது உத்தமசோழ புரம். சேலம் – சங்ககிரி நெடுஞ்சாலையில், சேலத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது உத்தமசோழபுரம் ஸ்ரீகரபுரநாதர் திருக்கோயில். சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்து வசதி நிறையவே உண்டு.

Leave a Reply