ஐரோப்பாவில் சோழர் செப்பேடு

சென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் கூட்டத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வரும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்தது ! சிலகாலம் ஒல்லாந்து எனும் நெதர்லாந்து நாட்டில் தங்கியிருந்து அலுவல்களைக் கவனிக்க வேண்டும் !

நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மணி நேர இரயில் பயணத்தில் வரும் நகரம் குரோனிங்கென், இந்த நகரம் தான் தங்கி பணிபுரிய வேண்டிய ஊர் ! சற்றே அரைமணிநேரம் பயணித்தால் ஜெர்மனியின் எல்லையைத் தொட்டுவிடலாம், ஆம்ஸ்டர்டாம் போன்றே கால்வாய்கள் நிறைந்த ஊர் !

ஐரோப்பா என்றதும் கண் முன் நிழலாடியது மத்திய கால மறுமலர்ச்சியும், பெர்லின் சுவரும், மோனாலிசாவும், டாவின்சியும், இரோமாபுரியும் வத்திக்கானும் !

தாய்நாட்டில் இருக்கும்போது சோழர் பாண்டிய வரலாறுகளைப் புரட்ட ஆரம்பித்த காலத்திலிருந்தே லெய்டன் செப்பேடுகளைப் பற்றிப் படித்ததுண்டு, சோழர் காலத்திய இரண்டு செப்பேடுகள் ஹாலந்து நாட்டின் லெய்டன் நகர அருங்காட்சியகத்தில் இருப்பதாக இருவரி செய்திகளாகவும், இந்திய தொல்லியல்துறை பதிப்பாம் எபிகிராபிகா இண்டிகாவிலும் பார்த்ததுண்டு !

அந்தச் செப்பேடுகளை நேரில் காண அமைந்த பொன்னான வாய்ப்பெனக் கருதி அதனைக் காண சிறு முயற்சிகள் செய்ய ஆரம்பித்தேன் !

ஆசிய ஆண்டுக் கொண்டாட்டங்கள் – லெய்டன் என்ற செய்தி இணையத்தில் வந்தது, அதனைப் பின்தொடர்ந்து இணையத்தில் தேடிப்பார்த்ததில் லெய்டன் பெரிய செப்பேடு அந்தக் கொண்டாட்டத்தின் பாகமாய் கண்காட்சியில் வைக்கப்படுவதாக அறிந்தேன், ஆனால் அந்தக் கொண்டாட்டங்கள் வாரநாட்களில் அமைந்ததால் செல்லும் வாய்ப்பு இல்லாமல் போனது !

லெய்டன் நகரம் நான் இருக்கும் இடத்திலிருந்து சுமார் மூன்று மணி நேரம் இரயில் பயணம் ! தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து நாற்பது நிமிடங்கள்

லெய்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தின் இணையத்தில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, அந்த இணையத்தில் “நூலகரை கேளுங்கள் (Ask your Librarian) என்ற மின்னஞ்சல்மூலம் முதல் மின்னஞ்சல் அனுப்பினேன்.

செப்டம்பர் 4 2017: உங்கள் நூலகத்தில் சோழர் செப்பேடுகள் இருப்பதாய் அறிகிறேன், அதனைக் காண வழிமுறைகள் /நேரம் கட்டணம் இவற்றைப் பற்றித் தெரியப்படுத்தவும் !

பதில் : நீங்கள் காணவிரும்பும் செப்பேடுகளில் ஒன்று கண்காட்சியில் உள்ளதால் அதனைக் காண செப்டம்பர் 23 வரை காத்திருக்க வேண்டும், மற்றொன்றை காணலாம். காண்பதற்கு நூலக உறுப்பினர் அட்டையோ ஒரு நாள் அனுமதி சீட்டோ அவசியம், காணவிரும்பும் பொருளின் விவரத்தையும் வரும் நாளையும் ஒரு வாரம் முன்பே தெரிவிக்க வேண்டும்.

செப்டம்பர் 11 2017: Or. 1687 and Or. 1688 (Leiden Plates) இதனைக் காண வரும் 23 சனிக்கிழமை திட்டமிட்டுள்ளேன், வரும்போது ஏதேனும் ஆவணங்கள் எடுத்து வரவேண்டுமா?

பதில் : மன்னிக்கவும், லெய்டன் நூலக சிறப்புப் பிரிவை வாரநாட்களில் காலை ஒன்பது முதல் மாலை ஐந்தரை வரை மட்டுமே காண முடியும், வரும்போது நெதர்லாந்து அடையாள அட்டையையும், முகவரியையும் கொண்டு வரவும் !

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ஆம்ஸ்டர்டாமிலிருந்து பணிபுரிய வேண்டும், அங்கிருந்து நாற்பது நிமிடம் தான் லெய்டன் அதனால் அந்த நாளுக்கு அனுமதி கேட்டேன் செப்டம்பர் 12 2017: அடுத்த வியாழன் 21 செப்டம்பர் செப்பேடுகளைக் காண அனுமதி வேண்டும், சுமார் நான்கு மணி அளவில் மாலை

பதில் : நீங்கள் வரும் நேரத்தில் செப்பிடுகள் பார்வைக்கு வைக்கப்படும், திங்கட்கிழமை அதிகாரிகளிடம் நினைவுபடுத்திவிடுகிறேன், நான்கு மணிக்கு முன் வர முயற்சி செய்யவும் ஏனெனில் அனுமதி அட்டை வாங்க நேரம் எடுக்கலாம்

செப்டம்பர் இருபத்தி ஒன்று வியாழக்கிழமை, அன்று ஆம்ஸ்டெர்டாமிலிருந்து பணிபுரிய வேண்டும், அவசர அவசரமாய் வேலைகளை முடித்துவிட்டு வண்டியைப் பிடிக்கவும் நேரம் மூன்றரை அடிக்கவும் சரியாய் இருந்தது, அடித்துப் பிடித்து லெய்டன் சென்று அங்கிருந்து ஒரு பேருந்தைப் பிடித்துக்கொண்டு சேரும்போது நூலக வாசலில் நான்கு முப்பது…10 யூரோக்கள் கொடுத்துப் படிகளிலூடே ஏறிச்சென்றால் நான்கு நாற்பது, கையில் இருந்த அனுமதி சீட்டைக் காட்டி நூல்கரிடம் அனுமதி கேட்க, அவரோ அருகிலிருந்த அறிவிப்பு பலகையைக் காட்டினார்.

” நான்கு மணிக்குமேல் சிறப்பு பிரிவில் எந்தப் பொருளும் காட்சிக்கு வைக்கப்படமாட்டாது, பார்வையிட விரும்பும் பொருளை ஒரு மணி நேரம் முன்னரே வந்து விவரங்கள் தர வேண்டும்.

” சற்றே வருத்தம், அந்த வயதான நூலகரிடம் நான் வடக்கே குரோனிங்கென் வெகுதூரத்திலிருந்து வருகிறேன் ஒரு பத்து நிமிடம் காண அனுமதி கேட்டேன், நல்ல உள்ளம் கொண்ட அவர் என்னை அமரவைத்து விட்டு முயற்சிப்பதாய் சொன்னார்.

உள்ளே தண்ணீர் பாட்டில்கள், பேனாக்கள் அனுமதி கிடையாது, சற்று நேரத்தில் அந்த நூலகர் ஒரு சிறு வண்டியில் இரண்டு செப்பேடுகளையும் வைத்து எடுத்து வந்தார், காணும் போதே கண்களில் ஆனந்தம், சிறுபுன்னகையுடன் கையில் கொடுத்தார்…நேரம் குறைவாக இருக்கிறது சீக்கிரம் பார்த்துச் செல்லுங்கள் என்றார்.

அழகு தமிழ் ஏடுகள் பொன்போல் பாதுகாக்கப்படுகின்றன, கையில் கையுறைகள் மாட்டிக் கொண்டே ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலாம், அதன் அருகே அதன் விளக்கமும் வைக்கப்பட்டுள்ளது.

பெரிய செப்பேடு இராசராசன் ஆணையை இராஜேந்திரன் உறுதிப்படுத்தியது, முப்பத்தி ஒரு இதழ்கள் தமிழும் வடமொழியும், சிறிய செப்பேடு முதலாம் குலோத்துங்கன் அதனை உறுதி படுத்தியதை சொல்வது !

மனதில் ஒரு பெரிய மகிழ்ச்சி, புகைப்படங்கள் சில எடுத்துக்கொண்டேன், அருகிலிருந்து போர்த்துகீசிய மாணவர் இதனை பற்றி என்னிடம் ஆர்வமாய் கேட்டு அறிந்து கொண்டார், புகைப்படமும் எடுத்துக் கொடுத்தார் செப்பேட்டு விவரங்களை அடுத்த பதிவில் விவரமாய் எழுதுகிறேன்!

நெதர்லாந்தின் லெய்டனுக்கு எப்படி வந்தன செப்பேடுகள்?

டியூலிப் தேசமாம் ஒல்லாந்தில் பணிநிமித்தமாய் வந்து சோழர் செப்பேடுகளைத் தேடிச்சென்று காண்பது ஒரு புது அனுபவம் தான், காற்றில்லா இடத்தும் கடந்து செல்லும் காதல் போல் தமிழும், தமிழின் சுவடுகளும் உலகெலாம் பரவியுள்ளன!

இந்த லெய்டன் செப்பேடுகளின் சிறப்பே, “கடல் கடந்த நாட்டின் மன்னன்” தமிழகத்தில் செய்த பௌத்த பள்ளிக்குச் சோழர்கள் அளித்த கொடைகளை தன்னகத்தே கொண்டு, இன்று மற்றொரு கடல் கடந்த தேசத்தில் பொக்கிஷமாய் நிற்பது தான்! சற்றே குழப்பமாய் இருந்தால் இப்படி சொல்கிறேன், படித்துப் பாருங்கள்.

கடல்கடந்த நாடாம் கடாரத்து அரசன் சோழ நாட்டில் நாகபட்டினத்து அமைத்த சூளாமணி பன்ம விஹாரத்திற்கு சோழமன்னர்கள் செய்த கொடையை சொல்லச் செப்பேடுகள் எழுதப்பட்டன, இந்தச் செப்பேடுகள் இன்று சோழ நாட்டில் இல்லை கடல் கடந்து மற்றோர் தேசமாம் நெதர்லாந்து எனும் ஒல்லாந்தில் உள்ளது.

யாம் வரலாற்றை முழுநேர படிப்பாய் படித்ததில்லை, கற்றறிந்த அறிஞர்கள்போல் அனுபவமும் இல்லை, ஆங்காங்கு புத்தகங்களைப் புரட்டி, ஏடுகளில் படித்து, நண்பர்கள் உதவியுடன் தகவல்களைச் சேகரித்து அளிக்கிறேன், இந்தச் செப்பேடுகளைப் பற்றி யாம் குறிப்பெடுத்த புத்தகங்களை உசாத்துணைகளாக (References) கடைசி பகுதியில் குறிப்பிடுகிறேன்.

லெய்டன் பெரிய செப்பேடு, லெய்டன் சிறிய செப்பேடு என்று இரண்டு செப்பேடுகள் லெய்டன் அருங்காட்சியகத்தின் பிரத்தியேக சேகரிப்பு பகுதியில் உள்ளன.

பெரிய லெய்டன் செப்பேடுகள்(21 ஏடுகள்)- இராஜராஜர் -1, இராஜேந்திரர்-1 (சமஸ்கிருதம்- 6 ஏடுகள், 111 வரிகள், தமிழ்- 15 ஏடுகள், 332 வரிகள்)

சிறிய லெய்டன் செப்பேடுகள்(3 ஏடுகள்)- குலோத்துங்கன் -1

எப்படி இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன?

எப்படி இந்தச் செப்பேடுகள் நெதர்லாந்து வந்து சேர்ந்தன என்ற கேள்விக்கு, அந்த லெய்டன் நூலகத்தில் இந்தச் செப்பேடுகளுடன் அவர்கள் வைத்திருந்த குறிப்பு விடையளித்தது, இந்த இரண்டு செப்பேடுகளும் ஒல்லாந்ததை சேர்ந்த திரு பிலோரென்ஷியஸ் காம்பெர் என்பவரால் இந்தியாவிலிருந்து ஒல்லாந்து (நெதர்லாந்து) கொண்டுவரப்பட்டன, இவர் பட்டாவியா அமைச்சராயிருந்தார். அவரது குடும்ப சொத்தாக இருந்த இந்த இரண்டு செப்பேடுகளும் அவரது கொள்ளுப்பேத்தி திருமதி ஜோஹன்னா காம்பெர் என்பவருக்கு வர, அவரை மணந்த கணவர் ஹெச்.ஏ. ஹாமேக்கர் என்பவர் இந்தச் செப்பேடுகளை 1862 ஆம் ஆண்டு லெய்டன் பல்கலைக்கழக நூலகத்திற்கு அளித்தார். இப்படி இந்தச் செப்பேடுகள் கடல் கடந்து லெய்டன் வந்து சேர்ந்தன.

ஏன் இந்த செப்பேடுகள் முக்கியம்?

கடல் கடந்து தூரதேசத்திலும் மிகவும் சிறப்பாய் பாதுகாக்கப்படுகின்ற தமிழர் பொக்கிஷங்களில் இவைகளுக்கு முதலிடம். இன்றைக்கும் படிக்கக்கூடிய அளவு தெளிவாய் மிகக் கவனத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

சோழ நாட்டிற்கும் இன்றைய மலேயா தீபகற்பத்தில் இருக்கும் கடார தேசத்திற்கும் இருந்த தொடர்புக்கு ஆதாரமாய் விளங்குகிறது. இதனால் கடல் கடந்தும் பரவியிருந்த சோழர் செல்வாக்கை அறியமுடிகிறது.

இவைகளில் இடம்பெற்றுள்ள வடமொழி சுலோகங்களால் சோழ மன்னர்களின் வரிசையையும், வரலாற்றையும் அறிய முடிகிறது. மெய்க்கீர்த்திகளால் மன்னனின் வீரச்செயல்களும், அவர்கள் ஆற்றிய போர்களும் வெற்றிகளும் அறியமுடிகிறது.

சோழநாட்டின் உட்பிரிவுகள், ஊர்ப்பெயர்கள், அந்தக் காலத்து வாழ்ந்த மக்களின் பெயர்கள், நிலஅளவைகள், வரிகள்பற்றி அறியமுடிகிறது.

சைவ வைணவ கோயில்களைப் பேணியது போலப் புறசமயங்களான பௌத்த, சமணப்பள்ளிகளையும் சோழ வேந்தர்கள் பேணினர் என்பதும் நோக்கத்தக்கது.

இடைக்கால தமிழக வரலாற்றை மீள்கட்டமைத்து வரலாறு அறிய, மிகவும் உதவியாக இந்தச் செப்பேடுகள் திகழ்கின்றன.

எங்கிருக்கிறது செப்பேடுகள் ? எப்படி காணலாம்?

நெதர்லாந்தின் தலைநகரம் ஆம்ஸ்டர்டாம் ஸ்கிபோல் விமான நிலையத்திலிருந்து சுமார் முப்பது/நாற்பது நிமிட இரயில் பயணத்தில் வரும் இடமே லெய்டன், புகழ்பெற்ற பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஊர். நெதர்லாந்தில் இரயில்பயணம் மிகவும் சுலபமும் அதிவேகமானதும் ஆகும். லெய்டன் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் நீங்கள் இறங்கினால் கூகிள் மேப் பார்த்து நடந்து செல்லச் சுமார் பத்து நிமிடம் பிடிக்கும், பேருந்தில் சென்றால் மூன்று நான்கு நிமிடத்தில் லெய்டன் பல்கலைக்கழக வாசலை அடையலாம்.

லெய்டன் பல்கலைக்கழக நூலகத்தின் சிறப்பு சேகரிப்பில் இந்தச் செப்பேடுகள் உள்ளன, சிறப்பு சேகரிப்பு “திங்கள் முதல் வெள்ளி” வரை காலை 9 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும். நூலகத்தைப் பார்வையிட உங்களுக்கு ஒரு நாள் பார்வையாளர் அட்டை அல்லது ஒரு வருட அட்டை தேவைப்படும்.

ஒரு நாள் பார்வையாளர் அட்டை – 10 யூரோக்கள்

ஒரு வருட அட்டை – 30 யூரோக்கள்

செல்வதற்கு ஒரு வாரம் முன்பே லெய்டன் நூலகத்திற்கு மின்னஞ்சல்மூலம் பார்க்கவேண்டிய இந்த இரண்டு செப்பேடுகளின் விவரங்களை அனுப்பிவிடுவது நல்லது.

Or. 1688 Charter of king Kulōttunga Chola I (r. 1070–1120 AD)]

Or. 1687 Charter issued by king Rājendra Chola I (r. 1012-1042 AD]

மாலை நான்கு மணிக்குமேல் சென்றால் செப்பேடுகளைப் பார்ப்பது கடினம், செப்பேடுகளைப் பார்வைக்கு வைக்க அவர்களுக்குச் சுமார் ஒரு மணிநேரம் தேவைப்படும், அதனால் சுமார் இரண்டு மணி நேரம் முன்பே செல்வது நல்லது. சென்றதும் உங்கள் மின்னஞ்சல் நகலையும், அட்டையையும் காட்டி நீங்கள் பார்க்க விரும்பும் செப்பேடுகளின் எண்களை நூலகரிடம் சொல்லுங்கள் (1687 & Or. 1688)

நூலகத்தில் பணிபுரிவோர் அத்தனைபேரும் கனிவானவர்கள், விவரம் கேட்டால் அருமையாய் சொல்பவர்கள்.

தண்ணீர் போன்ற திரவங்கள், பேனாக்கள் கொண்டு செல்ல உள்ளே அனுமதி இல்லை, பென்சிலை உபயோகப்படுத்தி குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம், நூலகர் அனுமதி பெற்று பிளாஷ் இல்லாமல் புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம். செப்பேடுகளைத் தொட்டு பார்க்கக் கையுறைகளை பயன்படுத்தலாம்.

பெரிய சிறிய செப்பேடுகளில் உள்ள செய்திகள் யாது, இதுவரை இந்தச் செப்பேடுகளை ஆய்வு செய்தோர் யார் ? இந்தச் செய்திகளையெல்லாம் அடுத்த பதிவில் விரிவாய் பாப்போம், இடையே ஐரோப்பிய பக்கங்களையும் நான் புரட்டவேண்டியிருக்கிறது 🙂

– தனசேகர் பிரபாகரன்

Leave a Reply