இரா. மன்னர் மன்னன் எழுதிய வரலாற்று புத்தகங்கள்.
மூவேந்தர்களையும் அடக்கியாண்ட களப்பிர அரசர்கள் வலுக்குன்றிய நிலையில் அவர்களிடமிருந்து பாண்டிய நாட்டைப் பாண்டியர்கள் மீட்டார்கள், சேர நாட்டை சேரர்கள் மீட்டார்கள், ஆனால் சோழ நாட்டைப் பல்லவர்கள்தான் மீட்டார்கள்.
காஞ்சியில் இருந்துக்கொண்டே சீன அரசருக்கு உதவும் அளவுக்குப் பல்லவர்களின் படைபலம் இருந்தது. பல்லவர்களின் யானைப்படை, கப்பற்படையின் ஒரு பிரிவாக இயங்கியது.
பல்லவரின் கட்டடக் கலையை, சைவத்தின் தேவாரம் பாடிய மூவரும், வைணவத்தின் ஆழ்வார்களும் புறக்கணித்தனர்.
சமஸ்கிருதத்தை தமிழில் எழுதுவதற்கான கிரந்த எழுத்துகளை தமிழுக்குக் கொண்டு வந்தவர்கள் பல்லவர்கள். ‘பல்லவ கிரந்தம்’ என்று அந்த எழுத்துகள் அழைக்கப்படுகின்றன.
கணிகையர் முறை பல்லவர் ஆட்சியில்தான் தமிழகத்தில் அறிமுகமானது. இதுவே தேவரடியார் முறையின் தொடக்கம் ஆகும். பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் கோவில்களில் இருந்த தேவரடியார்கள் முழுமரியாதையோடு நடத்தப்பட்டனர். அவர்கள் பாலியலுக்கான நபர்களாகப் பார்க்கப்படவில்லை.
இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார், என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா?
தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது! .
எது உண்மை ? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.
ஆயுத தேசம் – கொங்கு நாட்டின் தொழில்நுட்ப வரலாறு (மேம்படுத்தப்பட்ட பதிப்பு)
கற்கால மனிதனின் கல் ஆயுதம் முதல் இன்றைய அணு ஆயுதம் வரை மனிதனின் ஆயுதத் தேவை, காலம்தோறும் வடிவம் மாறிவந்தாலும் பல காரணங்களால் நீண்டுகொண்டே வருகிறது. தன்னைக் காத்துக்கொள்ள ஆயுதம் செய்த மனிதன், நாடுகளைப் பிடிக்க ஆயுதம் செய்தான். இப்போது உலக நாடுகள் பல, தங்கள் நாட்டின் பலத்தைப் பறைசாற்றிக்கொள்ள அணு ஆயுதம் எனும் விபரீத விளையாட்டில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கின்றன.
கல், மரம், இரும்பு என பல வகை ஆயுதங்களில் உலோக வகை ஆயுதங்களின் ஆயுள் அதிகம். அந்த உலோக ஆயுதங்களின் ஆதிக் கதையைச் சொல்கிறது இந்த நூல். உலக வரலாற்றின் மிகமூத்த ஆயுதங்களுக்கு உரிய தரமான இரும்பு கிடைத்த இடம், அந்த ஆயுதங்கள் பிறந்த இடம் கொங்கு. குறுநில மன்னர்களிடம் இருந்த ஆயுதத் தொழில்நுட்பங்களை ‘அடையாளம் கண்டவர்கள் சேரர்கள், அதனால்தான் அவர்கள் கொங்கில் நிலைப்பெற்று கொங்கு சேரர்களாகினர்.
பண்டைய தமிழகத்தில் இரும்பை உருக்க ஒருவிதமான உலைக்கலனும், எஃகை உருக்க இன்னொரு வகையான உலைக்கலனும் பயன்படுத்தப்பட்டதை அகழாய்வுகள் காட்டுகின்றன. கொடுமணலில் இன்றும் இந்த 2 வகையான உலைக்கலன்கள் காணப்படுகின்றன.
சேரரின் துருப்பிடிக்காத இரும்பு பற்றிய குறிப்புகள் எகிப்து, கிரேக்கம், ரோமானியம், துருக்கி, சிரியா ஆகிய நாடுகளின் வரலாறுகளில் காணப்படுகின்றது.
வட இந்தியாவின் பேரரசர்களான மவுரியர்கள் தமிழகத்தின் குறுநில மன்னனின் ஆயுதத்தைக் கண்டு திரும்பி ஓடி இருக்கிறார்கள்!. மவுரியர்கள் கால இந்திய வரைபடத்தில் தமிழகம் மட்டும் அவர்களால் வெல்லப்படாமல் இருந்தது. இதன் காரணம் நமது ஆயுத பலம்!.
கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இடைக்காலச் சேரர்கள் வெளியிட்ட நாணயங்களில் பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளின் அடிப்படை வடிவமைப்புகள் காணப்படுகின்றன.
கொங்கு எனப்படும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதியைப் பற்றி இந்திய வரலாறும் தமிழக வரலாறும் அவ்வளவாக எடுத்துரைப்பதில்லை. கொங்கு நாட்டுப் பகுதிகளின் உலோகங்கள்தான் இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாக விளங்கின என்பன போன்ற அறியப்படாத பல ஆச்சர்யத் தகவல்களைத் தருகிறது இந்த நூல்.
‘வானில் மிதந்து சென்று தாக்கும் ஆயுதங்களையும், பலவகை பீரங்கிகளையும், பெரிய அளவிலான கல் எறியும் கருவிகளையும் கொங்கில் பிற்காலச் சேரர்கள் உருவாக்கினர். இன்றைய விமானங்கள், ராக்கெட்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றின் ஆரம்ப கால வடிவங்கள் இங்குதான் தங்கள் வரலாற்றைத் தொடங்கின.’ – இதுபோல இன்னும் பல அரிய தகவல்கள் இந்த நூலெங்கும் சொல்லப்பட்டுள்ளன. இந்த நூலைப் படித்த பிறகு கொங்கு நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் நமக்குப் புரியும். ஆயுத தேசத்தில் உறைந்துகிடக்கும் அமைதியான வரலாறைக் காணலாம் வாருங்கள்.