பழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களினாலும், அயல் நாட்டார் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள், பயணக் குறிப்புகளாலும் பண்டைத் தமிழர்களின் கடல் வணிகத்தையும், அவர்கள் கடலில் செலுத்திய ஆட்சிமைகளையும் அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட முதல்நிலைத் தரவுகளின் அடிப்படையில் இந்த நூல் அமைகிறது.
தமிழர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த இனங்களாக வரலாற்றில் சுட்டப்படும் கிரேக்கர்கள், ரோமானியர்கள், அரேபியர்கள், பீனீசியர்கள், கல்தேயர்கள், சுமேரியர்கள், எகிப்தியர்கள் ஆகியோரடங்கிய யவனர்கள்; சீனர், கடாரத்தார், சாவகத்தார், சப்பானியர், பாலித்தீவினர் முதலான கீழ்த்திசை நாட்டினர்; ஆரியர், வடுகர், மோரியர், சாதவாகனர், கோசர் முதலான வடபுலத்தவர்கள் ஆகியவர்களுடனான வணிகத் தொடர்புகளையும் மொழிப் பண்பாட்டுத் தொடர்புகளையும் இந்நூலால் அறிய இயலும். பழந்தமிழர்களின் வணிகப் பயணங்கள் தரைவழியாகவும், கடல்வழியாகவும் அமைந்திருந்தன. ஆயினும் கடல்வழி வணிகப் பயணங்களே தமிழகத்திற்குப் பெருஞ்செல்வத்தினைத் தேடிக் கொடுப்பனவாக அமைந்தன. செல்வ வளமிக்க சூழலில் வாழ்ந்த தமிழக மக்கள் புலப்பெயர்வை விரும்பாத மனநிலையைக் கொண்டிருந்தனர் என்பன போன்ற அரிய தகவல்களை அறிய இந்நூல் பெரிதும் பயன்படுகின்றது.