புதுக்கோட்டை இளையாத்தங்குடி நகரத்தார் கல்வெட்டு கிடைத்துள்ளது

மல்லங்குடி சிவன்கோவிலுக்குத் திருவோலக்க மண்டபம் நிர்மாணித்துக் கொடுத்த இளையாத்தங்குடி நகரத்தார்கள் கல்வெட்டு கிடைத்துள்ளது. – ஆ.மணிகண்டன்
 
 
 
 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பேரையூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மல்லாங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள, திருவோலக்க மண்டபம் நிர்மாணித்த செய்தியடங்கிய பதினான்காம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் தலைவர் மேலப்பனையூர் கரு.ராஜேந்திரன், ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரெங்கன், ஆகியோரடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இக்கல்வெட்டு குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளரும் , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,  
 
இக்கல்வெட்டு பலகைக்கல்லில் முழுமையாகவும் தெளிவாகவும் உள்ளது. இரண்டே கால் அடி உயரத்துடனும் ஒன்றே கால் அடி அகலத்துடனும் சாய்ந்த நிலையில் அடிப்பகுதி மண்ணில் புதைந்து காணப்படுகிறது. கல்வெட்டின் மேற்புறத்தில் தோரணவாயில் காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து பொறிக்கப்பட்டுள்ள  கல்வெட்டானது 14 வரிகளுடன் உள்ளது.
 
கல்வெட்டின் காலம் :
 
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் பேரையூர் கிராம ஊராட்சிக்குட் பட்ட மல்லங்குடி உமையாண்டி ஊரணிக்கரை பிள்ளையார்  கோவிலுக்கு அருகில் நடப்பட்டுள்ள கல்வெட்டில் காலக்குறிப்புகள் ஏதுமில்லை.
 
எழுத்தமைதியின் அடிப்படையில் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பொறிக்கப்பட்டிருப்பதாகக் கணிக்க முடிகிறது.
 
கல்வெட்டுச் செய்தி :
 
இதில் “  பமஸ்து மலையாலங்குடியில் உடையார் ஒருபூவுகந்தருளிய நாயனார் திருவோலக்க மண்டபம் கல்வாயி நாட்டுக் குல சேகரபுரத்துக்குக் கழனிவாசலுடையான் திருக்கொடுங்குன்ற முடையான் அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தன்மம் சுபமஸ்து” என்று திருவோலக்க மண்டபம் அமைத்துக்கொடுக்கப்பட்ட செய்தியைப் பகிர்கிறது. 
 
ஒரு பூவுகந்தருளிய நாயனார் திருவோலக்க மண்டபம் :
 
ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்ற பெயரால் வழங்கப்பட்ட சிவாலய கட்டுமானத்தின் பகுதிகளைக் காண முடியவில்லை.
 
திருவோலக்க மண்டபம் குறித்துக் கூறும் திருவாசக (திருவா.21, 6) பாடல் வரிகள்  திருவோலக்கம் சேவிக்க என்கிறது. அதாவது திருவோலக்கம் என்ற பதம் இறைவனாரின் திருச்சபை என்ற பொருளுடன் வழங்கப்பட்டுள்ளது.
 
பக்தர்களின்  வழிபாட்டிற்காகத் திருவுருவம்  வைக்கப்படும் மண்டபம் திருவோலக்க மண்டபம் என்றே வழங்கப்பட்டிருப்பதை இந்த கல்வெட்டு உறுதி செய்கிறது. 
 
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் வணிகத்திற்காகப் பல ஊர்களிலும்  தங்களது வசிப்பிடங்களை மாற்றி வந்துள்ளதையும், கோயில் திருப்பணிகள், குளம் அமைத்தல் உள்ளிட்ட அறப்பணிகள்  செய்துள்ளதையும்   கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 
 
அவ்வழியில் மலையாலங்குடி ஒரு பூவுகந்தருளிய நாயனார் என்றழைக்கப்பட்ட சிவாலயத்தில் திருவோலக்க  (திருக்காட்சி) மண்டபத்தை குலசேகரபுரம் என்று அழைக்கப்பட்ட இளையாத்தக்குடி ஊரைச்சேர்ந்த  கழனிவாசலுடையான், திருக்கொடுங்குன்ற முடையான்,  அழகிய திருச்சிற்றம்பலமுடையான் என்பவர் அமைத்து கொடுத்த செய்தியைக் கூறுகிறது என்றார்.
 
ஆ.மணிகண்டன் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம்
 
மேலும் இக்கல்வெட்டைக்  கண்டுபிடிக்க உதவிய மல்லாங்குடியைச்சேர்ந்த  பெரியவர்கள்  நடராஜன் ,சுப்பிரமணியன், பள்ளி மாணவர்கள் உதயகுமார், தினேஷ்குமார், ராகுல், பிச்சைமுத்து, சந்தோஷ் குமார், ரூபினி,  ஷாலினி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்..

Leave a Reply